சனி, 20 பிப்ரவரி, 2010

மாயூரம் வேதநாயகர் நாவல் மட்டுமா எழுதினார்?

வேதநாயகரும் அவரின் சில தனிப்பாடல்களும் பகுதி-2

மாயூரம் வேதநாயகம் பிள்ளை:

மாயூரம் வேதநாயகர். சவரிமுத்துப் பிள்ளைக்கும் ஆரோக்கிய மரி அம்மாளுக்கும் மகனாகத் திருச்சிக்கு அருகிலுள்ள குளத்தூரில் 1826 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11 ஆம் நாள் பிறந்தார். வேதநாயகரின் பாட்டனார் மதுரநாயகம் பிள்ளை சைவ வேளாள மரபில் பிறந்தவர் என்றாலும் கத்தோலிக்கக் கிறித்தவ சமயத்தைத் தழுவியதால் அவர் வழிவந்த வேதநாயகர் பிறப்பால் கிறித்துவராகப் பிறந்தார்.

ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் மிகுந்த புலமை பெற்ற வேதநாயகருக்கு ஆங்கிலக் கல்வியைப் பல்கலைக் கழகங்களின் வாயிலாகப் பெறும் வாய்ப்பு கிடைக்கவில்லை. (சென்னைப் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது-1857). இவர் ஆங்கிலக் கல்வியைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் பெரும் புலமை பெற்றிருந்த தியாகப் பிள்ளை (திருச்சி நீதிமன்றத்தில் மொழி பெயர்ப்பாளராகப் பணியாற்றியவர்) என்பவரிடம் பயின்றார். தொடக்கத்தில் தம் 22 ஆம் வயதில் திருச்சி நீதிமன்ற ஆவணக் காப்பாளராகவும் பின்னர் 24ஆம் வயதில் திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார்.

1856இல் ஆங்கில அரசு நடத்திய உரிமையியல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான எழுத்துத் தேர்வை எழுதி வெற்றி பெற்றார் வேதநாயகர். 1857இல் அவருக்கு உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பதவி கிடைத்தது. தம் முப்பத்தொன்றாம் வயதில் அவர் இப்பதவியினை ஏற்றார். ஆங்கில அரசால் நீதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் தமிழர், முதல் இந்தியர் என்ற பெருமைகளுக்கு உரியவரானார் வேதநாயகர் (இந்தியாவின் முதல் சுதந்திரப் போராம் சிப்பாய்க் கலகம் நடைபெற்ற ஆண்டு). நீதிபதி பதவியில் நேர்மையோடும் தன்மானத்தோடும் பணியாற்றிய வேதநாயகருக்கு இடையில் பல இடையூறுகள் வந்தன. பதினைந்து ஆண்டுகள் மட்டுமே நீதிபதியாகப் பணியாற்றிய அவருக்கு 46 ஆம் வயதில் மேலதிகாரிக்குக் கீழ்படிந்து நடக்கவில்லை என்ற காரணத்தால் கட்டாயத்தின் பேரில் விருப்ப ஓய்வு வழங்கப்பட்டது.

வேதநாயகரின் குடும்ப வாழ்க்கை மிகுந்த சோகம் கலந்தது. இல்வாழ்க்கையில் அவர் மணந்துகொண்ட பெண்கள் அடுத்தடுத்துக் காலமாயினர். எனவே அவர் ஐந்து பெண்களை மணக்க நேரிட்டது. முதல் மனைவி பாப்பம்மாள். இரண்டாம் மனைவி இலாசர் அம்மையார். மூன்றாவது மனைவி அக்காள் மகள் மாணிக்கத்தம்மையார். இவருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். முதல் குழந்தை ஆண்குழந்தை ஞானப்பிரகாசம், இரண்டாம் மூன்றாம் குழந்தைகள் பெண் குழந்தைகள் சவரி முத்தம்மாள், இராசாத்தி அம்மாள். நான்காவது மனைவி அண்ணுக் கண்ணம்மாள். ஐந்தாம் மனைவி அம்மாளம்மாள். வாழ்க்கையில் எத்தனை சோகங்கள் வந்தாலும் கலங்காத நெஞ்சுரம் பெற்றவர் வேதநாயகர். எனவேதான் இத்துணை துன்பங்கள் தொடர்ந்த போதும் அவரால் சாதிக்க முடிந்தது.

வேதநாயகர் படைப்புகள்:

கவிதைப் படைப்புகள்
1. நீதி நூல் நீதி இலக்கியம் 1859
2. பெண்மதி மாலை பெண்கல்வி பற்றியது 1869
3. சோபனப் பாடல்கள் நலுங்குப் பாடல்கள் 1862
4. தனிப்பாடல்கள் உதிரிப் பாடல்கள் 1908
5. திருவருள் மாலை சமயப் பாடல்கள் 1873
6. திருவருள் அந்தாதி சமயப் பாடல்கள் 1873
7. தேவமாதா அந்தாதி சமயப் பாடல்கள் 1873
8. தேவதோத்திர மாலை சமயப் பாடல்கள் 1889
9. பெரிய நாயகி அம்மைப் பதிகம் சமயப் பாடல்கள் 1873
10. சர்வ சமய சமரசக் கீர்த்தனை தமிழிசைப் பாடல்கள் 1878
11. சத்திய வேதக் கீர்த்தனை தமிழிசைப் பாடல்கள் 1889

மொழிபெயர்ப்பு
12. சித்தாந்த சங்கிரகம் தமிழில் சட்ட ஆவணங்கள் 1862
13. 1850 – 1861 நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் சட்ட ஆவணங்கள் 1863

உரைநடை நூல்கள்
14. பெண்கல்வி கட்டுரை 1869
15. பெண்மானம் கட்டுரை 1870
16. பிரதாப முதலியார் சரித்திரம் நாவல் 1879
17. சுகுண சுந்தரி நாவல் 1887

1858 முதல் 1887 வரை தொடர்ந்து தமிழிலக்கியங்கள் படைப்பதில் ஈடுபட்ட வேதநாயகர் தமிழின் முதல்நாவலாம் பிரதாப முதலியார் சரித்திரத்தை (1879) எழுதித் தமிழிலக்கிய உலகில் தனியிடத்தைப் பெற்றுள்ளார்.

2 கருத்துகள்:

ஜெ.ஜெயமார்த்தாண்டன் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி வேதநாயகம் பிள்ளை பற்றி முதன் முறையாக இவ்வளவு செய்திகளை அறிகிறேன். அவரின் பிரதாப முதலியார் சரிதம், சுகுணசுந்தரி தவிர வேறு படைப்புக்களை நான் அறிந்ததில்லை. மற்ற படைப்புகள் அச்சில் இருக்கிறதா?

முனைவர் நா.இளங்கோ சொன்னது…

வேதநாயகரின் படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட்டுவிட்டதனால் இனி எல்லா நூல்களும் மறுஅச்சாக வாய்ப்புகள் மிகுதி. இப்பொழுது ஒரு சில நூல்கள் மட்டுமே கிடைக்கின்றன.
-முனைவர் நா.இளங்கோ

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...